90 பிக்சர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிக்க, அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், சிறுமி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் நடிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம்.
மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினச் சிறுமி கிருத்திகாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
பசுமையான பூங்குடி மலைக்கிராமத்தில் வசிக்கும் சிறுமி கிருத்திகாவுக்கு உயர்கல்வி படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசை. ஆனால், மலையில் பள்ளி வசதி இல்லாததால் கலெக்டரை சந்தித்து முறையிட விரும்புகிறார். அதற்குள் வயதுக்கு வந்துவிட அவருக்கு திருமணச் சடங்குகள் அரங்கேறுகின்றன. கல்யாணம் வேண்டாம் கல்வி தான் வேண்டும் என முடிவெடுக்கும் கிருத்திகா, கலெக்டர் முத்துவேலை எப்படி சந்தித்தார்? சிறுமியின் கல்விக் கனவு நனவாகிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முத்துவேல் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் வரும் அருள்நிதி 2-ம் பாதி படத்தை ஒட்டுமொத்தமாக தாங்குகிறார். அமைதியான நடிப்பும், அளவான உணர்ச்சி வெளிப்பாடும் அவரது கதாபாத்திரத்திற்கு சிறப்பை சேர்க்கின்றன.
ரம்யா பாண்டியன் தனது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அதேநேரம், சிறுமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிருத்திகா படத்தை தன் தோளில் சுமர்ந்து செல்கிறார். கல்வி மீது கொண்ட ஆசை, குடும்பத்தை விட்டு பிரியும் வேதனை, எதிர்காலம் குறித்த அச்சம் என பல்வேறு உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி நம் மனதில் பளிச்சென பதிந்துவிடுகிறார்.
முருகனை மலைவாழ் மக்கள் எப்படி வணங்கினார்கள் என்பதை காட்டிய விதம் அருமை.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிகக் குறைவான மக்கள் மட்டுமே பேசும் காடர் மொழியை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில், ரசிகர்கள் புரிந்துகொள்ள தமிழில் மொழி பெயர்த்துள்ளார் இயக்குநர்.
வான் மேகங்கள், ஓங்கி உயர்ந்த மரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், விதவிதமான வண்ண வானம் என்று காட்டை கவிதையாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு கூடுதல் வலிமை.
பொழுதுபோக்கை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், கல்வி சமத்துவமின்மையை உணர்வுபூர்வமாக திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகம். தந்தை பெரியார் புத்தகத்தை காட்சிகளில் முதன்மைப்படுத்திய விதம் இயக்குநரின் சமூக அக்கறையை காட்டுகிறது.
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் தரமான படைப்பாக ‘அருள்வான்’ வெற்றி பெற்றுள்ளான்.
– நிருபர் நாராயணன்
