சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் ஆழ்கடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “ஆழி”.
நாகர்கோவிலைச் சேர்ந்த படகு மெக்கானிக்காக வரும் சரத்குமார், சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலையும் செய்து வருகிறார். மகள் தேவிகா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். அவரோ கல்லூரியில் சக மாணவர் இந்திரஜித்தை காதலிக்கிறார்.
தகவல் அறிந்த சரத், மகளின் காதலனை நடுக்கடலுக்கு தூக்கிச் சென்று சித்திரவதை செய்து கொல்ல முயற்சி செய்கிறார். அவரது பிடியில் இருந்து இந்திரஜித் தப்பித்தாரா, காதலியுடன் இணைந்தாரா என்பது தான் படத்தின் சுருக்கமான கதை.
முதல் அரை மணி நேரம் சாதாரணமாக நகரும் படம், காட்சிகள் ஆழ்கடலுக்கு நகர்ந்த பின்பு விசைப்படகு வேகத்தில் நகர்கிறது.
இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் ஒரே கட்டுமஸ்தான ஹீரோவான சரத்குமார் மிகப்பெரிய பலம் என்றே கூறலாம். நடிப்பில் சும்மா மிரட்டியிருக்கிறார்.
இந்திரஜித் ஜெகஜித் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரத்குமாரிடம் அவர் அடிவாங்கும் காட்சியில் நமக்கே பதற்றம் ஏற்படுகிறது.
கடலும் படகும் கூட கதாபாத்திரம் போல் கதையையொட்டி அழகாக காட்டப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ஆனந்த் நாயரின் கேமரா விளையாடலுக்கு ஈடுகொடுத்து அற்புதமாக இசை அமைத்துள்ளார் வில்லியம் பிரான்சிஸ்.
இயக்குநர் மாதவ் ராமதாசன் நேர்த்தியான திரைப்படத்தை கொடுத்து, ரசிகர்களை தன்னைப் பற்றி பேச வைத்திருக்கிறார். காதலின் வலிமையை அற்புதமாக வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சிக்கு பலத்த கைத்தட்டல்கள் எழுகின்றன.
மொத்தத்தில், ஆழ்கடல் திரையுலகில் கிடைத்த நல்லதொரு முத்தாக உள்ளது ஆழி.
– நிருபர் நாராயணன்
