ஆர்பி பிலிம்ஸ் தயாரிப்பில் துதிவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் கொலைச்சேவல்.
கலையரசன், தீபா பாலு, பாலசரவணன், கஜராஜ், விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட், விஜயலக்ஷ்மி, ஜெயலட்சுமி, ராஜாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலையை அதன் ஆழம் வரை சென்று அழகாக படம்பிடித்து காட்டியுள்ளனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் தம்பதி கலையரசன் மற்றும் தீபா குலதெய்வக் கோயில் அமைந்துள்ள மலைக்கோயிலுக்கு செல்லும்போது, நிகழும் அசம்பாவிதமும், அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதும் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
கலையரசனும் தீபாவும் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் தீபா ரசிகர்களை அழவைத்து விடுகிறார்.
பால சரவணன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
படத்தின் முதல் பாதி பரபரப்பாக நகர்கிறது. அதற்கு பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சாந்தனின் மிரட்டல் இசையும் உறுதுணையாக உள்ளன. ஜவ்வாது மலையின் அழகையும் அமைதியையும் காட்சிக்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
சுவரில் வரையப்பட்டுள்ள இளையராஜா ஓவியமும், நிறைசூழி தெய்வச் சிலையும் ஆர்ட் டைரக்டர் சரவணா அபிராமனின் நுணுக்கமான பங்களிப்பை வெளிபடுத்துகிறது.
‘சாதி இல்லைனு சாமியே சொன்னாலும் இவங்க நம்பமாட்டாங்க’ என்ற வசனம் அருமை.
கிளைமாக்ஸ் காட்சியில் மனிதர்களின் கொடூர புத்தியை கண்ணாடி போல் வெள்ளித்திரையில் அம்பலப்படுத்தியுள்ளனர். சபாஷ்.
கோடை வெயிலுக்கு இணையான த்ரில்லர் படம். ( குறிப்பு : ஏசி தியேட்டரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்டு ரசிக்கவும் )
– நிருபர் நாராயணன்
