தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக கப்பலில் ஒரு கன்டெய்னர் வருகிறது. அதை அம்பலப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா.
கார் மெக்கானிக்காக வரும் லெஜண்ட் சரவணனின் கடையில், துறைமுகத்தில் தாதாவாக இருக்கும் சால்ட் தனது காரை சர்வீஸ்க்காக அடிக்கடி விட்டுச் செல்கிறார். இந்நிலையில், ஹீரோவின் மகளை சால்ட் கடத்தியதாக அவரை நம்பவைத்து வில்லனுக்கு எதிராக லெஜண்ட் சரவணனை திருப்பி விடுகிறார் ஆண்ட்ரியா. அவர் மூலம் கன்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.
ஆனால், அங்கு தான் ட்விஸ்ட். அனைத்தையும் திட்டமிட்டு அரங்கேற்றியது ஆண்ட்ரியா இல்லை, லெஜண்ட் சரவணன் தான் என்பது அம்பலமாகிறது. கதாநாயகன் ஏன் அப்படி செய்தார் என்பதே படத்தின் சுவராஸ்யமான மீதிக்கதை.
மகள் மீது அளவற்ற பாசம், அவருக்காக சந்திக்கும் சவால்கள், ஆக்சன் என இந்த திரில்லர் திரைப்படத்தில், உச்ச நட்சத்திர நடிகராக உருவெடுத்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் கொண்டாடும் வகையில் லீடர் அமைந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டாருக்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். எந்த குறையும் சொல்ல முடியாத வகையில் சிறப்பாக இயக்கி இருக்கிறார் துரை செந்தில்குமார்.
லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, லால், குழந்தை நட்சத்திரம் இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் ஜிப்ரான். கேமரா கோணங்களும் அதற்கு ஈடுகொடுத்து நகர்கிறது.
படத்தில் மெல்ல வேகமெடுக்கும் திரைக்கதை நேரம் ஆக ஆக ஜெட் வேகத்தில் நகர்கிறது. கிளைமாக்ஸில் வரும் ரயில் சண்டை காட்சிகள் அருமை.
நேற்று லெஜண்ட், இன்று லீடர், நாளை…? அரசியல் சார்ந்த படமாக இருக்குமோ…?
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்களைப் போல பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் புதிய லீடர், அவர் தான்…!
– நிருபர் நாராயணன்
