தென் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் மற்றும் யோக்கோபுரம் கிராமங்களில், பெயருக்கு ஏற்றார் போல், முறையே இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இரு கிராமங்களைச் சேர்ந்த விமலும் சாயா தேவியும் காதலிக்கிறார்கள். இதற்கு நடுவே பல கொலைச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதனை செய்தது யார் என்பதும், ஊர் எதிர்ப்பை தாண்டி காதலர்கள் கரம் பிடித்தார்களா என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர் விமல் வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அனைத்து நவரச நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி சாயாதேவியும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் காவல்துறை அதிகாரியாக நடித்து கலக்கியிருக்கிறார். கோலிவுட்டிற்கு இன்னொரு குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார் என்றே கூறலாம்.
சர்ச் பாதிரியாராக எம்.எஸ் பாஸ்கர் கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மலை கிராமத்தின் அழகை அப்படியே கேமராவில் அழகாக அள்ளிக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் கேமராமேன் சுகுமார். தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளோடு அற்புதமாக ஒன்றிப் போவது ரம்மியமாக உள்ளது.
மதத்தை விட மனிதநேயம் முக்கியம் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். முள் செடியில் மலர்ந்த ரோஜா போல, மத சர்ச்சை கதை பின்னணியில் நல்லதொரு படமாக வெளிவந்துள்ளது பரமசிவன் பாத்திமா.
– நிருபர் நாராயணன்