சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பயணிகள் பரபரப்பாக சொந்த ஊர் செல்லும் பேருந்தை நோக்கிச் ஓடிச் சென்றனர். சென்னை வந்தவர்கள் மாநகரப் பேருந்துகளில் போட்டி போட்டு ஏறினர்.
அனைத்தையும் மாறாத புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. அவரது சிலையுடன் சிலர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
மெல்லிய மழைத்தூறலுக்கு நடுவே, பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது ஆவின் பூத். அதன் அருகே, ரிப்போட்டரு தம்பியும் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் காத்திருக்க, கிசு கிசு கோவாலும் வந்து சேர்ந்தார்.
ஆவினில் மூன்று ஹாட் மில்க் வாங்கி வந்தார் அழகு.
“ஆவின் பால் தனி டேஸ்ட் தாம்பா” என்று அதனை பருகியபடி கூறினார் கோவாலு.
“கோவாலு, நீ சொல்றது சரிதான். ஆனா, உண்மையில் நாம் தினமும் அருந்துவது பாலே அல்ல என்பது பலருக்கும் தெரியாது. எந்த தனியார் நிறுவனமும் அவர்கள் விற்பனை செய்யும் அளவுக்கு பால் கொள்முதல் செய்வது கிடையாது. பெயருக்கு ஓரிரு இடங்களில் சில நூறு லிட்டர் பாலை மட்டுமே விவசாயிகளிடம் வாங்குகிறார்கள். ஆனால், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் பால் தயாரித்து விற்கிறார்கள்” விளக்கமாக கூறத் தொடங்கினார் தம்பி.
“இது எப்படி தம்பி, கணக்கு இடிக்குதே…. இது எப்படி சாத்தியம்?” அப்பாவியாக கேட்டார் அழகு.
“ஆமாண்ணே, நாம் பால்னு சொல்லி தினமும் குடிக்கிறது பாலே இல்லை. சோயா பவுடரில் பால் நிறத்தில் தயாரிக்கப்படுவதையே வாங்கி குடிக்கிறோம். இதில், வெள்ளை நிறத்திற்கும் நுரை வருவதற்கும், சில தனியார் நிறுவனங்கள் சோப்பு கரைசலையும் பயன்படுத்துகிறார்கள் என்பதே அதிர்ச்சியான உண்மை” என ரகசியத்தை உடைத்தார் தம்பி.
“விளம்பரத்தில் பசுமாட்டையும் புல்வெளியையும் அவ்வளவு அழகா காட்டுறாங்களேப்பா… அப்ப அதெல்லாம் பொய்யா…” என ஏமாற்றப்படும் உணர்வுடன் கேட்டார் கோவாலு.
“நிச்சயமாக, இதை மாட்டுப் பால் என்று கூறுவதை விட சோயா பால் என்று கூறுவதே 100 சதவீதம் உண்மை. உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் பாலின் தேவையும் சந்தையும் மிகப்பெரியது. பல லட்சம் கோடி ரூபாய் புரளும் பால் வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நுணுக்கமாக கண்காணிக்கவும் மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் தம்பி.
“அப்போ ஒரிஜினல் பால் எங்கே தான் வாங்குறது…” ஏக்கத்துடன் கேட்டார் அழகுராஜா.
“சந்தையில் விற்கப்படும் பாலில் ஆவின் ஓரளவு தரமான பால் தான். தமிழ்நாட்டில் அவர்கள் தான் விவசாயிகளிடம் அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள். மற்றபடி நாம் தான் டீ, காபி அருந்துவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் நீர் ஆகாரம், மோர் என மாறிக்கொள்ளலாம்” இயற்கை வாழ்வியலின் சிறு துளியை மட்டும் எடுத்துக் கூறினார் தம்பி.
“அட கலப்படம் பாலில் மட்டுமா இருக்கு… உணவகங்களில் பிரியாணி, பிரைடு ரைஸ்னு தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கிட்டுப் போறாங்களே… அதில், பெரும்பாலான கடைகளில் நிறத்துக்காக மெரூன் கலரில் ஒரு ரசாயனம் கலக்கிறார்கள் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும். அது மயக்கம், தலைவலி, சோர்வு முதல் கேன்சர் வரை உருவாக்கக்கூடிய ஆபத்தான ரசாயனப் பொடி. அதை உணவில் பயன்படுத்த அனுமதியே கிடையாது என்றாலும், சட்டவிரோதமாக அதை ரகசியமாக பயன்படுத்துகின்றனர். பிரியாணி கடை நடத்துபவர்கள் அதன் ஆபத்தை உணர்ந்தோ உணராமலோ கடை வியாபாரத்துக்காக பயன்படுத்துறாங்க” பெரிய விளக்கத்தையும் தம்பி கொடுக்க, நண்பர்கள் இருவரும் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பேப்பர் கப்பை அங்கிருந்த பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வாட்ஸ்அப் மெசேஜை பார்க்கத் தொடங்கினார் ரிப்போட்டரு தம்பி…
“பரமசிவன் பாத்திமா” சினிமா விமர்சனம் என்னாச்சு எனக் கேட்டிருந்தார் எடிட்டர்.
ரெடி ஆயிடுச்சு சார் எனக் கூறி, எழுதி தயாராக வைத்திருந்த கன்டென்டை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார் ரிப்போட்டரு தம்பி. செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தார்.
“ஆமா தம்பி, இங்கேயே சாப்பிட்டுவிட்டு போலாமா” என பாசத்தோடும் உரிமையோடும் கேட்டார் அழகு.
“சரிண்ணே, வாங்க சாப்பிடலாம்” என்று தம்பி கூற, அங்கிருந்த பிரபல உணவகத்திற்குள் மூவரும் சென்றனர்.
சந்திப்பு தொடரும்…