அர்ஜுன் – அபிராமி ஜோடி பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ள திரைப்படம்.
கராத்தே மாஸ்டர் அர்ஜுன், மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் குடும்பத்திற்கும் மலை கிராமத்தில் கனிம வளத்தை கொள்ளையடித்து பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டம் தீட்டும் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ரவுடி கும்பலிடம் இருந்து அர்ஜூன் குடும்பம் தப்பியதா, கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தினார்களா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
அரசியல்வாதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கான ரகசிய அடையாளமான 100 ரூபாய் நோட்டு அர்ஜூன் கையில் சிக்குகிறது. அதை மீட்க வரும் கனிமவளக் கும்பலை அர்ஜூன் குடும்பம் சரமாரியாக தாக்கி பிளாஸ்ட் செய்கிறது. அதன் பிறகு படம் ஜெட் வேகத்தில் நகரத் தொடங்குகிறது.
அர்ஜுன் வழக்கம்போல் ஆக்சன் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 63 வயதிலும் சண்டை காட்சிகளில் மாஸ் காட்டி ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்திருக்கிறார்.
கதாநாயகி அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ப்ரீத்தி முகுந்தன் வில்லன்களை பந்தாடும் காட்சிகள் அருமை. வில்லன் ஜான் கொக்கேன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் அதற்கேற்ப நகரும் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பிளஸ் பாயின்ட் என்றே கூறலாம்.
புதுமையான கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் கலந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே ராஜ்.
மொத்தத்தில், கோடை விடுமுறைக்கு குட்டீஸ்களுடன் தியேட்டருக்கு சென்று ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம்.
– நிருபர் நாராயணன்
