சினிமாவில் உள்ள 24 கலைத்துறைகளில் ஒரே ஆளாக 21 துறைகளையும் தானே கையாண்டு தமிழ் திரையுலகில் புதிய சாதனை படைத்துள்ளார் குகன் சக்ரவர்த்தி.
கடற்கரை சார்ந்த வாழ்வியலை மையப்படுத்தி கதை சுழல்கிறது. அப்துல் கலாம் கூறியதைப் போன்று கனவு காணும் ஒரு மனிதனை சுற்றி நிகழும் சம்பவங்களை நேர்த்தியாக படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.
சூழ்நிலையால் கொலையாளியாக மாறும் கதாநாயகன் அதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். அதிலிருந்து அவர் தப்பிப் பிழைத்தாரா இல்லையா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி, உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு ஆகியவற்றை தானே கவனித்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தி.
மேலும், படத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், டாக்டர் அப்துல் கலாம் ஆகியோரைப் பற்றி ஒரு கருத்து ஆழமிக்க பாடலை எழுதி, இசையமைத்து தனது சொந்தக் குரலில் பாடி அசத்தியுள்ளார்.
எடுத்துக் கொண்ட பணிகளில், அனைத்துத் துறையிலும் முத்திரை பதித்திருக்கிறார் ஹீரோ குகன். பாராட்டுகள்.
கதாநாயகி அலினா ஷேக் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்திற்கு குறைசொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார்.
பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்டோரும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
கடலோரப் பகுதிகளை அவ்வளவு அழகாக கேமரா படம்பிடித்துள்ளது.
காதல், திகில், மர்மம் என ஒரு மிக்சர் கலவையாக படம் ராக்கெட் வேகத்தில் நகர்கிறது.
மொத்தத்தில், இந்த படம் நிச்சயம் கடலோரக் கதைகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியதில் ஒரு குறுநில மன்னன் தான்.
– நிருபர் நாராயணன்
